அரசாணை 115 விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக் குழு கடந்த மாதம் 18-ம் தேதி அரசாணை 115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் உள்ளிட்ட அரசுப் பணியாளர் சங்கங்கள் மேற்படி சீர்திருத்தக் குழுவின் ஆய்வு வரம்புகளில் குறுகிய கால பணியிடங்களை வெளிமுகமை மூலமாக நிரப்புவது குறித்து தங்களுடைய கோரிக்கைகளைக் முதலமைச்சரிடன் அளித்துள்ளனர். அவர்களுடைய கோரிக்கையை கேட்ட பின்னர், எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மனிதவள மேலாண்மை துறையால் அமைக்கப்பட்ட 5 பேர் குழுவின் ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்படுவதாகவும், புதிய ஆய்வு வரம்புகள் வெளியிடப்படும் எனவும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இன்று காலை தலைமை செயலகத்தில், தலைமை செயலக சங்கத்தினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.