சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தான் ஜாஃபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த மனோஜ் (32) என்ற தனியார் மருத்துவரை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக மருத்துவர் மனோஜ் உறுதியளித்த நிலையில், காதலிக்கும்போது அவரது கடன் தொல்லை, தங்கையின் படிப்பு செலவு என பல்வேறு காரணங்களைக் கூறி பல தவணைகளாக 51 லட்சம் ரூபாய் வரை தன்னிடம் இருந்து இதுவரை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால்,வாக்களித்தபடி மருத்துவர் மனோஜ் தன்னை திருமணம் செய்துகொள்ளாமல் தட்டிக்கழித்து வருவதுடன் தன்னிடம் வாங்கிய பணத்தையும் திருப்பித் தராமல் வேறு சில பெண்களுடன் பேசிக்கொண்டு தன்னை ஏமாற்றி வருவதாகவும் புகாரில் பெண் குற்றஞ்சாட்டியுள்ளார்.
எனவே,தன்னை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி லட்சக் கணக்கில் பணம் பறித்து ஏமாற்றி வரும் மருத்துவர் மனோஜ் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகாரில் பெண் வலியுறுத்தியுள்ளார்.
இப்புகாரின் அடிப்படையில் மருத்துவர் மனோஜிடம் அசோக் நகர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மருத்துவர் மனோஜ் பணம் பெற்று ஏமாற்றியது உறுதியானது. அதனடிப்படையில் மருத்துவர் மனோஜ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.