அரசு மருத்துவமனைகளில் பறக்கும் படைகளை அமைத்து சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையை சேர்ந்த மருந்து ஸ்டோர் பொறுப்பாளர் முத்துமாலை என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கோவை அரசு மருத்துவமனையில் மருந்துகளை காலாவதியாக செய்தாக தனக்கு பணி ஓய்வு பலன்கள் வழங்க மறுத்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
அதில், அரசு மருத்துவமனைகளுக்கு காலாவதியாகாத மருந்துகளை வழங்க ஏதுவாக, கொள்முதல் முதல் விநியோகம் வரை, பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கும் அதிகமாக ஒரு குறிப்பிட்ட மருத்துவமனையில் மருந்துகள் இருந்தால் அவற்றை தேவையான மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்றும் 6 மாதங்களுக்கு தேவையான மருந்துகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இந்த அறிக்கைக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். மேலும் அரசு மருத்துவமனைகளில் காலாவதி மருந்துகள் வினியோகத்தை தடுக்கும் வகையில் பறக்கும் படைகளை அமைத்து திடீர் சோதனைகள் நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். தமிழகத்தில் சிறப்பான மருத்துவ கட்டமைப்பு உள்ளதாகவும், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய பயோ மெட்ரிக் வருகை பதிவேடு முறையை பின்பற்றலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.