மதுரை மாவட்டத்தில் 209 கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வுக்கான விடைத்தாள்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 10ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று காலை 10மணிக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத்தேர்வு நடைபெறவுள்ளது.
இதில் விண்ணப்பத்திருந்த ஏராளமான பட்டதாரி இளைஞர்கள், பெண்கள் தேர்வு எழுத காத்திருந்த நிலையில் நள்ளிரவில் கிராம உதவியாளர் தேர்விற்காக மதுரை தெற்கு வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தேர்வுமையத்தில் உள்ள ஆங்கில திறனறிவுத்தேர்வுக்கான விடைத்தாள்களை சிலர் சமூகவலைதளங்களின் மூலமாக அனுப்பியதோடு விடைத்தாள்களை பெற 10ஆயிரம் ரூபாய் கேட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியத.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, வினாத்தாள்கள் மாற்றம் செய்யப்பட்டு தேர்வின்போது வேறு வினாத்தாள்களை வழங்கி அதன் மூலமாக தேர்வு நடத்தவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.