ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படுகின்றனர் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, புதுச்சேரி மாநில அரசின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரு.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றார். புதுச்சேரியில் வேலை வாய்ப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்கனவே 400 பேருக்கு காவல் துறையில் வேலை கொடுக்கபப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க முடிவு செய்து முதற்கட்டமாக 1,400 பேருக்கு வேலை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 750 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது என்று தெரிவித்த மத்திய அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரியில் ரூ.500 கோடியில் மேம்பாலங்கள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகின்றது என்றும் கூறினார்.
ஆளுநர்கள் இந்திய அரசியலமைப்புக்கு உட்பட்டு செயல்படுகின்றனர். ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது என்று எப்படி கேட்க முடியும்? ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றார்கள், அதனால் ஆளுநரை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏற்றவர்களை
ஆளுநராக நியமிக்க வேண்டும் என கேட்பது நடக்காது ஒன்று என குற்றம்சாட்டினார். தமிழகத்தில் திமுக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் கேள்வி கேட்கின்றார். ஆனால் அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்று கேட்பதா? என கேள்வியெழுப்பிய அவர், புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் இணைந்து பணியாற்றுகின்றனர் என்றார். மேலும் புதுச்சேரியில் மாநில அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.