பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சொத்து வரி செலுத்த கால அவகாசம் டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள்
2022-23ம் நிதியாண்டிற்கான இரண்டாம் அரையாண்டு சொத்துவரியினை தனிவட்டி
இல்லாமல் செலுத்த கால அவகாசம் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து
சென்னை மாநகரட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்ட விதிகளின்படி, ஒவ்வொரு அரையாண்டின்
தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து
உரிமையாளர்களுக்கு, செலுத்தப்படும் சொத்து வரியில் 5% அல்லது அதிகப்பட்சமாக
ரூ. 5000 ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
2022-23ம் நிதியாண்டின் முதல் அரையாண்டில், சொத்துவரி பொது சீராய்வு
மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரி பொது சீராய்வின்படி சொத்து உரிமையாளர்களால் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் செலுத்தப்பட்டு வருகிறது.
சொத்துவரி பொது சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை செலுத்தாத சொத்து
உரிமையாளர்கள் தங்களது சொத்துவரி மதிப்பீட்டிற்குரிய உயர்த்தப்பட்ட
சொத்துவரியினை தனிவட்டி இல்லாமல் செலுத்துவதற்கு நவம்பர் 15 வரை வரை
நீட்டித்து கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் (2022-23) நவம்பர் 15 ஆம்
தேதி வரை சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை 5.92 லட்சம் சொத்து
உரிமையாளர்கள் நிலுவை இல்லாமல் செலுத்தியுள்ளனர்.
தற்போது, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படா
வண்ணம் அனைத் துறைகளும் மழை வெள்ள தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளில்
முழுமையாக ஈடுபட்டுள்ள நிலையில் சொத்து உரிமையாளர்களின் நலன் கருதி,
உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுநாள்வரை செலுத்தாதவர்கள், தனிவட்டி இல்லாமல்
சொத்துவரி செலுத்த மேலும் கால அவகாசம் டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சொத்துவரி பொது சீராய்வின்படி உயர்த்தப்பட்ட சொத்துவரியினை இதுவரை செலுத்தாத
சொத்து உரிமையாளர்கள். இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரும் டிசம்பர் 15 க்குள்
செலுத்தி 2 சதவீத தனிவட்டியினை தவிர்க்க மாநகராட்சி அறிவுறுத்தல்.