10 சதவீத இடஒதுக்கீடு தீர்ப்புக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், திமுக சார்பில் தற்போது உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனுவில், இந்த இட ஒதுக்கீடு என்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் எதிரானது என்ற வாதத்தை முன்வைத்துள்ளது. இந்த வழக்கை திறந்தவெளி வழக்கு விசாரணையாக நடத்தவேண்டும். பொதுவாக சீராய்வு மனுக்கள் நீதிபதியின் அறையில் வைத்து நடைபெறும். ஆனால் அப்படி நடக்கக்கூடாது என்ற முக்கியமான கோரிக்கையையும் திமுக மனுவில் தெரிவித்துள்ளது.
இது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவினரிடையே பாகுபாட்டை உருவாக்கக்கூடியதாக இருக்கிறது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை விதிகளுக்கும், நெறிமுறைகளுக்கும் எதிராக இந்த இட ஒதுக்கீடு இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கு 5நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீர்ப்பு வெளியான நிலையில், மூன்று நீதிபதிகள் சரியானது என்றும், இரு நீதிபதிகள் சரி இல்லை என்றும் சொல்லி இருந்தது குறிப்பிடத்தக்கது.