வாரிசு திரைப்படத்திற்கு பின்னதாக தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ.
இத்திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார், அதுமட்டுமல்லாது இத்திரைப்படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே மும்முரமாக நடித்து வருகின்றனர். இதில் நடிகை த்ரிஷா கிட்டத்தட்ட விஜய்க்கு 14 வருடங்கள் கழித்து ஜோடியாகிறார், இதுவே ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் நிலையில் , ஆக்ஷன் கிங் அர்ஜூன், இயக்குநர் மிஷ்கின் , இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், மலையாள நடிகர் மேத்திவ் தாமஸ் போன்றோரும் நடித்து வருகின்றனர்.
இதனிடையே விக்ரம் திரைப்படத்தில் நடித்த ஏஜெண்ட் டீனாவும் லியோ திரைப்படத்தில் இணைந்திருக்கிறார். சமீபத்தில் லியோ திரைப்படத்தின் அப்டேட்டுகள் முழுவதுமாக வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வந்தது. அதனோடு தற்காலிகமாக தளபதி 67 என கொடிக்கட்டி பறந்து கொண்டிருந்த டைட்டிலை மாற்றி லியோ என படத்திற்கு பெயர் வைத்து அதனை அதிகாரப்பூர்வமாக வீடியோவாகவும் படக்குழு வெளியிட்டிருந்தது.
இதனை தொடர்ந்து லியோ படம் குறித்த அப்டேட்டுகள் ஒரு பக்கம் அறிவிக்கப்பட்டு இருந்து கொண்டிருந்த நிலையில், மறுபுறம் படக்குழு படப்பிடிப்பிற்காக 150 பேருடன் தனி விமானம் மூலம் காஷ்மீருக்கு பறந்தனர். இத்திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பின் காரணம், இதற்கு முன்னதாக விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படமும் ஒரு பக்க காரணமாக இருந்தாலும், மறுபக்கம் இருக்கும் அதிகப்படியான எதிர்பார்ப்பு என்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படங்கள் அதிகப்படியான வரவேற்பை பெறுவது தான்.
சமீபத்தில் உலக நாயகனை வைத்து இயக்கிய விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் லோகேஷ் கனகராஜுக்கு மிகப்பெரிய மரியாதை கூடிக்கொண்டே வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். மேலும் இயக்குநர் மிஷ்கின் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்பட்ட நிலையில் , நேற்று மிஷ்கின் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில் லியோ திரைப்படத்தில் நான் வரும் காட்சிகளின் படப்பிடிப்புகள் முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் நான் திரும்பினேன். லியோ திரைப்படத்தின் எனது ஷூட்டிங் முடிந்து விட்டதாகவும், மேலும் எனது அருமை தம்பி லோகேஷ் கனகராஜ் லியோ படப்பிடிப்பு தளத்தில் போர் வீரனைப் போல செயல்பட்டு வருகிறார், இத்திரைப்படத்தில் எனக்கும் ஓர் வாய்ப்பு கொடுத்தமைக்காக நன்றி என மனம் நெகிழ்ந்து பதிவிட்டிருப்பது தற்போது சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாகி வருகிறது.